திருச்சி, பிப்.26: திருவானைக்காவல் கோயிலில் முருகன் சிலை மாயமாகி விட்டதாக போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி திருவானைக்காவலில் பிரசித்தி பெற்ற ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் உள்ளது. பஞ்ச பூத தலங்களில் நீர் ஸ்தலம் என அழைக்கப்படுகிறது. அப்பர், சுந்தரர், திருஞானசம்மந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். இக்கோயில் பிரகாரத்தில் முருகனுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன் கற்சிலை இருந்தது. இந்த சிலையை தற்போது காணவில்லை என சமூகவலைதளங்களில் செய்தி மற்றும் படம் வைரலாக பரவியது. அந்த போட்டோவில் சன்னதியில் முருகன் சிலை இல்லை. சிலையை தாங்கும் அடிபீடம் மட்டுமே இருந்தது. இது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.