தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் 20 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கம்

திருவாரூர், பிப்.26: 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையினை உடனடியாக துவங்கிட வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பலன்களை வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய பின்னரும் கோரிக்கைகள் நிறைவேறாத காரணத்தினால் நேற்று முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனையொட்டி மாநிலம் முழுவதும் நேற்று அதிகாலை முதல் அரசு பஸ்கள் இயங்கவில்லை. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மற்றும் நன்னிலம் ஆகிய 4 அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் மொத்தம் 217 பஸ்கள் உள்ள நிலையில் இந்த வேலை நிறுத்தம் காரணமாக 20 சதவீத பஸ்கள் மட்டுமே இயங்கின. இதில் அதிகபட்சமாக நன்னிலம் பணிமனையில் இருந்து 9 பஸ்கள் இயக்கப்பட்டன.

திருவாரூர் மற்றும் மன்னார்குடியில் இருந்து தலா 5 பஸ்கள், திருத்துறைப்பூண்டியில் 4 பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் இந்த வேலைநிறுத்தம் காரணமாக நேற்று பஸ் நிலையங்களில் பஸ்சிற்காக பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக தனியார் பஸ்களில் அளவுக்கு அதிகமான கூட்டம் காணப்பட்டது. மேலும் நேற்று முகூர்த்த நாள் என்பதால் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களுக்கு பொதுமக்கள் சென்று வர வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில் பேருந்துகள் இயங்காததால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மேலும் கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட ரயில் சேவை தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இதுவரையில் பாசஞ்சர் ரயில் இயக்கப்படாததால் திருவாரூர் மாவட்டத்திலிருந்து தஞ்சை, நாகை மாவட்டங்களுக்கு சென்று வரவேண்டிய அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் என பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த வேலை நிறுத்தம் குறித்து தொமுச முன்னாள் மண்டல துணை பொதுச் செயலாளர் கலியபெருமாள் கூறுகையில், அரசு செவிசாய்க்காததன் காரணமாக வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கி உள்ளோம். எனவே பொதுமக்கள் தங்களது சிரமத்தை பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் இந்தப் போராட்டமானது தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: