விக்கிரமங்கலத்தில் நிலைக்கத்தக்க மானாவாரி வளர்ச்சி இயக்க திட்ட பயிற்சி

தா.பழூர், பிப்.26: தா.பழூர் வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் விக்கிரமங்கலம் கிராம விவசாயிகளுக்கு, நிலைக்கத்தக்க மானாவாரி வளர்ச்சி இயக்கம் திட்டம் குறித்த பயிற்சி நடைபெற்றது. இதில் வேளாண்மை உதவி இயக்குநர் அசோகன் அவர்கள் தலைமை வகித்து கோடை உழவு செய்வதன் அவசியம் குறித்தும், இந்த பகுதிக்கு ஏற்ற கடலை விதை ரகங்கள் குறித்தும், அதன் மகசூல் பண்புகள் குறித்தும் எடுத்துக் கூறினார். மேலும், விதை நேர்த்தி செய்வதால் விதை மூலம் பரவும் பூஞ்சாண நோயினை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விரிவாக எடுத்து கூறினார்.

பின்னர் கிரீடு வேளாண்மை அறிவியல் மைய ஆராய்ச்சியாளர் அசோக்குமார், கோடை உழவு செய்வதன் அவசியம் குறித்தும், ஊடுபயிர் சாகுபடி செய்வதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளை வரவழைத்து தீமை செய்யும் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம் என விளக்கினார். முன்னதாக வட்டார தொழில் நுட்பமேலாளர் விஜயகுமார் வரவேற்று அட்மா திட்டம் குறித்து எடுத்து கூறினார்.  பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ரஞ்சிதா மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் லெட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: