தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ.62 கோடியில் திட்டப்பணிகள்

தூத்துக்குடி, பிப்.26: வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.62 கோடி திட்டப்பணிகளை பிரதமர் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கோரம்பள்ளம் பாலம், ரயில் மேம்பாலம் ரூ.42 கோடியில் 8 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 277மீ நீளம் கொண்ட 4 வழிச்சாலையாக இருந்த பாலம் 8 வழிச்சாலையாக சுமார் 8.5மீ அகலப்படுத்தப்பட்டுள்ளது.  மேலும் 1.577 கிமீ நீளமுள்ள இணைப்பு சாலையின் அகலம் 10.30மீ அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் துறைமுகங்கள் வாயிலாக நடைபெறும் சரக்கு போக்குவரத்து பரிமாற்றம் நேர்த்தியாகவும், விரைவாகவும் நடைபெறுவதுடன் சரக்கு கையாளும் நேரமும் கணிசமாக குறையும்.

இதேபோன்று துறைமுகத்தில் ரூ.20 கோடியில் 5 மெகாவாட் தரைதள சூரியஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதனால் ஆண்டுக்கு 80.64 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இத்திட்டம் மூலம் துறைமுகத்தின் 60% மின்தேவை பூர்த்தி செய்யப்படும். இந்த திட்டப்பணிகள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நிறைவடைந்த பாலங்களை திறந்து வைத்தும், சூரியஒளி மின்உற்பத்தி நிலையத்துக்கு அடிக்கல் நாட்டும் பணியையும், பிரதமர் மோடி காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இப்பணிகளை காணொலியில் திறந்து வைத்தார்.

தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சிக்கு வஉசி துறைமுக சேர்மன் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.  கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் துறைமுக துறை சேர்மன் பிமல்குமார் ஜா,  துறைமுக செயலாளர் பிரவீன்குமார் சிங், துறைமுக உபயோகிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: