×

வேப்பனஹள்ளியில் கடனை திருப்பி கேட்ட வாலிபருக்கு கத்திக்குத்து

கிருஷ்ணகிரி, பிப்.26: வேப்பனஹள்ளியில், கடனை திருப்பி கேட்ட வாலிபரை கத்தியால் குத்திவிட்டு தப்பிய கார்பென்டரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வேப்பனஹள்ளி கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயசங்கர். இவரது மகன்  சசி(21). இவர் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த கார்பென்டரான  நூர்பாய்(34) என்பவருடன் சசிக்கு பழக்கம் ஏற்பட்டு, நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு  முன்பு நூர்பாய், சசியிடம் ₹500 கடனாக பெற்றுள்ளார். உடனடியாக தருவதாக  கூறி சென்ற நூர்பாய், அந்த பணத்தை கொடுக்கவில்லை.

இந்நிலையில், நேற்று  முன்தினம் அங்குள்ள ஒரு கோயில் அருகே, நூர்பாய் செல்வதை பார்த்த சசி அவரை தடுத்து  நிறுத்தி, கொடுத்த கடனை திருப்பி கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த நூர்பாய், சரமாரி தாக்கியதுடன், மறைத்து வைத்திருந்த  கத்தியால் சசியின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த  அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், வேப்பனஹள்ளி போலீஸ் எஸ்ஐ சந்துரு  வழக்குப்பதிந்து தப்பி ஓடிய நூர்பாயை தேடி வருகிறார்.

Tags : Veppanahalli ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் 1089 போலீசார் பாதுகாப்பு