×

கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி, பிப்.26: கிருஷ்ணகிரியில், கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், அண்ணா சிலை எதிரில் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோவிந்தம்மாள் தலைமை வகித்தார்.

மாவட்ட நிர்வாகிகள் தேவி, கவிதா, சுஜாதா, சிவகாமி, பார்வதி முன்னிலை வகித்தனர். சிஐடியூ மாவட்ட தலைவர் நஞ்சுண்டன் பங்கேற்று வாழ்த்தி பேசினார். போராட்டத்தின் போது, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக ஊழியருக்கு ₹10 லட்சமும், உதவியாளருக்கு ₹5 லட்சமும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா