நாகர்கோவில், பிப்.26: நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசி திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. நாகர்கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோயில் மாசி பெருந்திருவிழா கடந்த 16ம் தேதி தொடங்கியது. இன்று (26ம் தேதி) நிறைவு பெறுகிறது. நேற்று காலை 8 மணிக்கு சுவாமியையும், அம்பாளையும் திருத்தேரில் எழுந்தருள செய்து தேரோட்டம் நடந்தது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பெண்கள் திரண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர். தேர் சக்கரங்கள் புதுப்பிக்கப்பட்ட நிலையில் ஒரு தேரில் அம்பாளும், சுந்தரேஸ்வரரும், மற்றொரு தேரில் பிள்ளையாரும் ரத வீதிகளை வலம் வந்தனர். விழா நாட்களில் தினமும் கலை நிகழ்ச்சிகள், சுவாமி பவனி உள்ளிட்டவை நடைபெற்றது. இன்று (26ம் தேதி) மாலை 6 மணிக்கு சுவாமியும், அம்பாளும் ஆராட்டு துறைக்கு ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.