×

மழை வெள்ளம் பாதித்த பட்டியலில் திருப்பூர் மாவட்டத்தை சேர்க்க வேண்டும்

திருப்பூர், பிப்.26: திருப்பூர்  மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாதாந்திர மக்கள் குறைதீர்  கூட்டம் கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில்,  மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது  கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்  அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2021 ஜனவரி மாதம் 13ம்  தேதியிலிருந்து 16ம் தேதி வரை பருவம் தவறி பெய்த மழையால் விவசாயம்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளம் சேதம் ஏற்பட்டுள்ள  மாவட்டங்களின் பட்டியலில் திருப்பூர் மாவட்டம் விடுபட்டுள்ளது. ஆனால்,  திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம்  வட்டங்களில் நெற்பயிர் விளையும் தருவாயில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட  ஏக்கரில் கடும் சேதம் ஏற்பட்டு எவ்வித பயனும் இன்றி நாசமடைந்துள்ளது.  எனவே திருப்பூர்  மாவட்டத்தை மழை வெள்ளம் பாதித்த உள்ள மாவட்டமாக தமிழக அரசின் பட்டியலில்  சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

தமிழக கட்சி சார்பற்ற  விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு கடன் சங்கத்தில் விடுபட்ட  அனைத்து விவசாய பெருமக்களுக்கும் அனைத்து கடனையும் தள்ளுபடி செய்யவேண்டும்.  தற்போது தள்ளுபடி செய்யப்பட்ட அனைத்து விவசாய பெருமக்களுக்கும் உடனடியாக  பயிர் கடன் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கலெக்டர் தமிழக முதல்வரிடம்  விவசாயிகள் கோரிக்கையை கொண்டு செல்ல வேண்டும்.  

வெள்ளக்கோவில் அடுத்த சேனாதிபாளையம் கிராமம் ராமலிங்கபுரம் எஸ்.பிகே  தோட்டத்தில் வசிக்கும் தங்கவேல் என்பவரது 30 செம்மறி ஆடுகளை வெறிநாய்கள் கடித்து கொன்றுவிட்டது. எனவே பாதிக்கப்பட்ட தங்கவேலுக்கு அரசிடமிருந்து இழப்பீடு  வாங்கித்தர வேண்டும். தாராபுரம்  வட்டத்தில் அமைந்துள்ள உப்பாறு  அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும். கொங்கு நாடு விவசாயிகள் கட்சி சார்பில் அளித்த  மனுவில் கூறியிருப்பதாவது: பவர் கிரிட் மற்றும் தமிழ்நாடு மின் தொடர்பு  கழகத்தால் நிறுவப்பட்ட உயர் மின் கோபுரங்கள் அமைக்க விவசாய இடங்களில்  நிலம், மரங்களுக்கான இழப்பீடு முழுமையாக கோவை மாவட்டத்தில் ஏற்கனவே  வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் நிறைய இடங்களில்  நிலத்திற்கு இழப்பீடு வழங்காமல் உள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட  கலெக்டர் இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து இழப்பீடுகளை வழங்க வேண்டும். தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அளித்த மனுவில்  கூறியிருப்பதாவது: கிராமப்புறங்களில் விவசாயிகள் தங்கள் மருத்துவம் மற்றும்  அத்தியாவசிய தேவைக்காக தேசிய வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள பணத்திற்கு  வட்டியின் மீது 20 சதவீதம் அளவிற்கு வருமான வரி பிடித்தம் செய்கிறார்கள்.  

இச்செயல் மிகப்பெரிய அநீதியாகும். எனவே தாங்கள் அனைத்து தேசிய வங்கி மண்டல  மேலாளர்களையும் அழைத்துப் பேசிய தொகையை மீட்டு தரவேண்டும்.குடிமங்கலம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம்  மூலம் விவசாயிகளுக்கு சின்ன வெங்காயம் விதைகள் இலவசமாக வழங்கப்பட்டது.  இதில், சாகுபடி செய்ய ஆர்வம் அதிகரித்துள்ள விவசாயிகளுக்கு  விதைகள் வழங்கப்படவில்லை. எனவே  இதன் மீது கவனம் செலுத்தி விவசாயிகளுக்கு உரிய விதை கிடைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Tags : Tirupur district ,
× RELATED சொத்து பிரச்சனை!: திருப்பூர் மாவட்டம்...