உளுந்தூர்பேட்டை, பிப். 26: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புல்லூர் கிராமத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வரும் இடத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த கடையை மூட வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என தெரிகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. 50 பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் முழக்கமிட்டப்படி டாஸ்மாக் கடையை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் டாஸ்மாக் கடை நுழைவு வாயில் பகுதியில் பேரிகார்டுகளை போட்டு தடுத்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தள்ளிக்கொண்டு செல்ல முயன்றதால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.