செய்யூர், பிப். 26: செய்யூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் அப்பகுதி மக்கள் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வாட்டாட்சியர் அலுவலகம் முன்பு 20க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் 100 சதவீத வேலை வாய்ப்புகளை தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும். எரிபொருட்கள் விலை உயர்வு, இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார மசோதாவை கண்டித்து கோஷமிட்டனர். மேலும், செய்யூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். செய்யூரில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.