உத்தமபாளையம், பிப்.26: உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் அம்மா சிமெண்ட் கிடைக்காமல் கட்டிடப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். உத்தமபாளையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மலிவு விலையில் அம்மா சிமெண்ட் விற்பனை செயப்பட்டது. இங்கு வட்டார அளவில் உத்தமபாளையம். உ. அம்மாபட்டி,ராமசாமி நாயக்கன்பட்டி, கோகிலாபுரம். உள்ளிட்ட 13 கிராம ஊராட்சிகளில் வசிப்பவர்கள் மற்றும் பல்வேறு கிராமங்களிலும், வசிக்கக்கூடிய பொதுமக்கள், தங்களது மிகச்சிறிய அளவில், வீடுகள், கட்டிடங்கள், கட்டும் போதும், ஏற்கனவே பழுதடைந்து ஒழுகும் நிலையில், உள்ள வீடுகளை சரிசெய்து கட்டவும், இங்கு பதிவு செய்து, மானிய விலையில் அம்மா சிமெண்ட் வாங்கி செல்கின்றனர்.ஒரு மூட்டை சிமெண்ட் 216 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அம்மா சிமெண்ட் வரும்போது இங்குள்ள அதிகாரிகள், பொதுமக்களுக்கு தேவையை அறிந்து 100 மூட்டை, 200 மூட்டை என சப்ளை செய்வதுடன், காண்ட்ராக்டர்களும், இதனை வாங்கி வருகின்றனர். வெளிமார்க்கெட்டில் ஒரு மூட்டை ரூ 400 க்கு மேல் விற்கப்படுகிறது.