வருசநாடு, பிப். 26: வருசநாடு வனப்பகுதியில் பல்லாயிரக்கணக்கில் அரிய வகை மரங்கள் மலைப்பகுதியில் உள்ளன. இந்த மரங்களை இரவு, பகலாக வனத்துறை ஆசியோடு சமூக விரோதிகள் வெட்டி கடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
கடமலை - மயிலை ஒன்றியத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வனத்துறை அமைந்துள்ளது. இதில் குறிப்பாக கண்டமனூர் வனச்சரகம், வருசநாடு வனச்சரகம், மேகமலை வனச்சரகம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது, தற்போது வருசநாடு வனப்பகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு செய்து புதிய வனகாடுகள் வெட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில நாட்களாக அரிய வகை மரங்களை வெட்டி அளிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து உள்ளது. ஆனால் இதுவரையும் வனத்துறை அதிகாரிகள் மலைப்பகுதிகளில் ஆய்வுப் பணியை மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர், இதனால் வனத்துறைக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பும் சேதமும் ஏற்பட்டுள்ளது.