×

வங்கி கடன் செலுத்துவதில் பிரச்னை மின்கோபுரத்தில் ஏறி கண்டக்டர் தற்கொலை முயற்சி: ஆவடி பணிமனையில் பரபரப்பு

ஆவடி, பிப்.26: வங்கியில் கல்வி கடன் செலுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையால், ஆவடி போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 30அடி மின்விளக்கு கோபுரத்தில் ஏறி ஓய்வு பெற்ற கண்டக்டர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், திருவள்ளுவர் நகர், 4வது தெருவில் சார்ந்தவர் தங்கமணி (65). இவர், ஆவடி போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இந்நிலையில் நேற்று காலை தங்கமணி ஆவடி போக்குவரத்து கழக பணிமனையில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.


பின்னர், அவர் மாலை 4 மணி அளவில் பணிமனை வளாகத்திலுள்ள 30 அடி மின்விளக்கு கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த சக ஊழியர்கள்,  மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கோபுரத்தில் ஏறி அவரை மீட்டுள்ளனர். இதில், மயக்கம் அடைந்த தங்கமணியை போலீசார் ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், அவர் அங்கிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இது குறித்து, ஆவடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் தங்கமணி கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.

இவர் தனது மகன் ராகுலின் பொறியியல் பட்டப்படிப்புக்கு திருமுல்லைவாயலில் உள்ள ஒரு வங்கியில் 2009ம் ஆண்டு ரூ.2.25 லட்சம் பணத்தை கல்வி கடனாக பெற்றுள்ளார். அதனை, அவர் முறையாக செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் வங்கி நிர்வாகம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வேண்டும் என கூறி உள்ளனர்.  மேலும்,  தங்கமணியின் வங்கி கணக்கிலிருந்து கடந்த இரு மாதங்களாக ஓய்வூதியத்தை நிர்வாகம் முடக்கி வைத்துள்ளது. இதனையடுத்து, அவர் வங்கி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டுள்ளார். ஆனால், நிர்வாகம்

தங்கமணியிடம் நீங்கள் கல்விக்கடனை முழுமையாக செலுத்தவில்லை என கூறி உள்ளனர்.

மேலும், தங்கமணி நேற்றும் திருமுல்லைவாயல் வங்கிற்கு சென்று மீண்டும் முறையிட்டுள்ளார். அப்போது, வங்கி அதிகாரிகள் கல்வி கடன்

பாக்கி உள்ளது என கூறியதுடன் முடங்கிய ஓய்வு ஊதியத்தை தரவில்லையாம். இதனால் அவர் மன உளைச்சல் அடைந்துள்ளார். இந்நிலையில், நேற்று தங்கமணி ஆவடி பணிமனையில் உள்ள நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொண்டு அங்கு உள்ள மின்விளக்கு கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்வி கடன் பிரச்சினையால், ஓய்வுபெற்ற கண்டக்டர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது ஆவடி பணிமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்