அங்கன்வாடி ஊழியர்கள் இரவு, பகலாக போராட்டம்

சிவகங்கை, பிப்.26: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும். அலுவலக உதவியாளர், இரவு காவலர், மசால்ஜி ஈப்பு ஓட்டுநர் ஆகிய காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை ஒரே அரசாணையில் வரன்முறைப்படுத்த வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தை பணிக்காலமாக உத்தரவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் பிப்.17 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் தழுவிய இந்த போராட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால் தாலுகா அலுவலகங்கள், ஆர்டிஓ அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்டவைகளில் வருவாய்த் துறை பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

போராட்டத்தையடுத்து கலெக்டர் அலுவலகம் முன் தொடர் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்றுவோம் என 110 விதியின் கீழ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததை அமல்படுத்த வேண்டும். பஞ்சப்படியுடன் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் கடந்த 22ம் தேதி முதல் கடந்த மூன்று நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் பந்தல் அமைத்து அங்கன்வாடி ஊழியர்கள் இரவு, பகலாக இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். இதில் மாவட்டத் தலைவர், மாவட்ட செயலாளர் பாக்கியமேரி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: