சிவகங்கை, பிப்.26: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும். அலுவலக உதவியாளர், இரவு காவலர், மசால்ஜி ஈப்பு ஓட்டுநர் ஆகிய காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை ஒரே அரசாணையில் வரன்முறைப்படுத்த வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தை பணிக்காலமாக உத்தரவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் பிப்.17 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் தழுவிய இந்த போராட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால் தாலுகா அலுவலகங்கள், ஆர்டிஓ அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்டவைகளில் வருவாய்த் துறை பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.