மதுரை, பிப்.26: மதுரையில் அமைச்சர் தொகுதியில் ரேஷன், ஆதார் அட்டை நகல்களுடன், செல்போன் நம்பரையும் அதிமுகவினர் சேகரித்து வருகின்றனர். மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் தொகுதியில் உள்ள பொன்மேனி, பெத்தானியபுரம், பாத்திமாநகர் உள்ளிட்ட இடங்களில் கட்சியின் மகளிர் அணியினர் ரேஷன், ஆதார் அட்டைகளின் நகல்கள், செல்போன் எண் ஆகியவற்றை இப்பகுதியின் 300க்கும் அதிக வீடுகளில் ஒவ்வொரு வீடாகச் சென்று சேகரித்து வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதியினர் கூறும்போது, ‘‘தூக்குச்சட்டிகள், சேலைகள் தருவதாகக் கூறி இந்த ஆவணங்களை பெற்றுச் சென்றுள்ளனர்’’ என்றனர். தேர்தலை எதிர்நோக்கி, விதிகளை மீறி பொருட்கள் விநியோகம் செய்ய முயற்சித்து வரும் ஆளும் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.