உசிலம்பட்டியில் அதிமுக எம்எல்ஏ அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தால் பரபரப்பு

உசிலம்பட்டி, பிப்.26: உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாத உதவித்தொகை மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுடையவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும், அரசு வேலை வாய்ப்பில் 4 சதவீதமும், தனியார்துறையில் 5 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தில் முறையாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த சில நாட்களாக மாற்றுத்திறனாளிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றணர். நேற்று உசிலம்பட்டி தினசரி மார்க்கெட்டிலுள்ள உசிலம்பட்டி அதிமுக எம்.எல்.ஏ நீதிபதியின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அங்கு குடியேறும் போராட்டம் நடத்தினர். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லக்கண்ணு, ஒன்றிய செயலாளர் ராமர் ஆகியோர் தலைமை வகித்தனர். உசிலம்பட்டி ஒன்றியசெயலாளர் சின்னச்சாமி, ஒன்றியத்தலைவர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உட்பட 50 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: