ஜல்லிக்கட்டு வழக்குகளை ரத்து செய்யாவிட்டால் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக பிரசாரம் சூழலியல் ஆர்வலர் முகிலன் பேட்டி

மதுரை, பிப்.26: ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை ரத்து செய்யாவிட்டால் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்க மக்களிடம் பிரசாரம் செய்வோம் என சூழலியல் ஆர்வலர் முகிலன் கூறினார். மதுரை அலங்காநல்லூர், தல்லாகுளம் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு மீட்பு போராட்டம் தொடர்பாக சூழலியல் ஆர்வலர் முகிலன் உள்பட 63 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு மதுரை ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. முகிலன் உள்ளிட்ட 7 பேர் ஆஜராகினர். பின்னர் விசாரணை மார்ச் 25க்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் முகிலன் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக அரசு 26 ஆயிரம் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை ரத்து செய்து இருப்பதாக கூறியது வெற்று அறிவிப்பு. இவ்வழக்குகள் அனைத்தும் மூன்று ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. இதனால் தானாகவே இவ்வழக்குகள் ரத்தாகிவிடும். இருப்பினும் இவ்வழக்குகளை ரத்து செய்வதாக தமிழக அரசு நாடகமாடி வருகிறது. சிபிசிஐடி போலீசார் பதிவு செய்த எந்த வழக்கும் ரத்து செய்யப்படவில்லை. எனவே ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை உண்மையிலேயே ரத்து செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை ரத்து செய்யாவிட்டால் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்க மக்களிடம் பிரசாரம் செய்வோம். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: