கொடைக்கானலில் காட்சிப்பொருளாக மாறிய ஏடிஎம் குடிநீர் இயந்திரம் சுற்றுலாப்பயணிகள் தவியாய் தவிப்பு

கொடைக்கானல், பிப். 26: கொடைக்கானலில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட ஏடிஎம் குடிநீர் இயந்திரம் செயல்படாமல் காட்சிப் பொருளாக மாறியதால் சுற்றுலாப்பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால்  ஒரு லிட்டர் ,இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடை செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களுக்கு மாற்று ஏற்பாடாக கொடைக்கானல் நகர் பகுதியில்  ஏடிஎம் குடிநீர் இயந்திரங்கள் அமைக்கப்படும் என்று நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் கொடைக்கானல் நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் ஏடிஎம் குடிநீர் இயந்திரங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் கொடைக்கானல் நகராட்சி படகு இல்லத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்கப்பட்ட சில தினங்களிலேயே செயல்படாமல் காட்சிப் பொருளாக மாறியது. இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அதேபோல நகராட்சி அறிவித்த இடங்களில் இதுவரை ஏடிஎம் குடிநீர் இயந்திரங்கள் அமைக்கப்படவில்லை. தனியார் பங்களிப்புடன் ஒரு சில இடங்களில் பெயரளவிற்கு மட்டுமே இந்த குடிநீர் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் குடிநீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: