சூளகிரி, பிப்.25: சூளகிரி அருகே பின்டேகானப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வசந்தப்பா. கடந்த சில ஆண்டுக்கு முன்பு வசந்தப்பா இறந்து விட்டார். இவரது கடைசி மகனான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மஞ்சுநாத்(30) என்பவருக்கு, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு டோரிப்பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சின்னம்மா(25) என்பவரை திருமணம் செய்து வைத்தனர். மஞ்சுநாத், ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.
நேற்று காலை 7.30 மணியளவில் மஞ்சுநாத், வழக்கம்போல் பணிக்கு டூவீலரில் புறப்பட்டார். சூளகிரி- பேரிகை சாலையில் உள்ள பஜாரில் வந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த லாரி மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட மஞ்சுநாத் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.