ஊட்டி, பிப்.25:நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் பாதுகாப்பிற்காக ‘ெசஹலி’ (நண்பன்) என்னும் பெயரில் இலவச தொலைபேசி எண் உருவாக்கப்பட்டு உள்ளது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் சைல்டு ஹெல்ப்லைன் சார்பில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மைய அரங்கில் நேற்று நடந்தது. சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் சராயு, ஊட்டி உதவி ஆட்சியர் மோனிகா ரானா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து, நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள ெசஹலி என்னும் பெயரில் இலவச தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்தினார்.
அதன்பின் அவர் பேசியதாவது: நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் அதிக வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுடன் அவர்களின் குழந்தைகளும் உடன் உள்ளனர். பெற்றோர் வேலைக்கு சென்ற பின் அக்குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே, அக்குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அவர்கள் தயக்கமின்றி புகார் செய்ய ஏதுவாக ெசஹலி என்னும் பெயரில் இலவச தொலைபேசி எண் சேைவ உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான எண் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஓரிருநாளில் அறிவிக்கப்படும். அதுவரை 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். வடமாநில தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் அவர்களுக்கு தேவையான உதவிகளை அவர்கள் மொழியிலேயே தெரிவிக்கலாம்.
குழந்தைகளை பாதுகாப்பது ஆண் குழந்தைகளின் பொறுப்பாக உணர வேண்டும். மேலும், ஒரு பள்ளியில் இரண்டு குழந்தைகள் தூதுவர்களாக தேர்வு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு எதிராக ஏதேனும் குற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் பள்ளி தூதர்கள் மூலம் தெரிவிக்கலாம். நேரடியாக தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, பள்ளி மாணவ, மாணவியர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழியினை ஏற்று கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரபு, பாதுகாப்பு அலுவலர் தீபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.