அங்கன்வாடி ஊழியர்கள் 3ம் நாளாக காத்திருப்பு போராட்டம்

ஊட்டி, பிப்.25: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3ம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 331 பேரை போலீசார் கைது செய்தனர். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ரங்கராஜன் கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார். இதில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்து அரசு ஊழியர்களாக்கி கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும். அகவிலைப்படி உயர்வுடன் கூடிய முறையான ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியருக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சமும், உதவியாளருக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய தொடர் காத்திருப்பு போராட்டம் கடந்த 22ம் தேதி துவங்கியது. 3ம் நாளாக நேற்றும் ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. அங்கன்வாடி ஊழியர்கள் சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 331 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டத்தை முன்னிட்டு டி.எஸ்பி.க்கள் ஜெயபாலன், அருண் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: