பிரதமர் மோடி இன்று கோவை வருகை பாதுகாப்புக்கு 7 ஆயிரம் போலீசார் குவிப்பு

கோவை, பிப். 25: பிரதமர் மோடி இன்று கோவை வருவதை தொடர்ந்து கோவையில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். ஓட்டல், லாட்ஜ்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். கோவை பீளமேடு  கொடிசியா வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டம் இன்று (வியாழன்) மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதற்காக டெல்லியில் இருந்து இன்று காலை விமானம் மூலம் புறப்படும் பிரதமர் மோடி, காலை 10.25 மணிக்கு சென்னை வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மதியம் 2.10 மணிக்கு அங்கிருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு 3.35 மணிக்கு வருகிறார். கோவை கொடிசியா அரங்கத்தில் புதிய திட்டங்களை துவக்கி வைத்து பேசுகிறார். மாலை 5 மணிக்கு கொடிசியா மைதானத்தில் நடக்கும் பா.ஜ. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.

பிரதமர் வருகையையொட்டி கோவை நகருக்கு ‘சீல்’ வைத்து போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். 16 செக்போஸ்ட்களில் வீடியோ கண்காணிப்பு பணி நடக்கிறது. கொடிசியா ரோட்டில் தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு சோதனை நடக்கிறது. கொடிசியா மைதானம், விழா அரங்கம் என 3 ஆயிரம் ஏக்கர் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, 24 மணி நேரமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டனர். டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி தலைமையில் 17 எஸ்பி.க்கள், 38 கூடுதல் எஸ்பி.க்கள், 48 டி.எஸ்பி.க்கள், உதவி கமிஷனர்கள் என பாதுகாப்பு பணியில் 7 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுதவிர, பிரதமர் அலுவலகத்தின் சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.ஜி.) கமாண்டோக்கள் 30 பேர் கோவையில் முகாமிட்டுள்ளனர். குண்டு துளைக்காத 4 கார்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. மண் தோண்டிய இடங்களில் மெட்டல் டிடெக்டர், மைன்ஸ் ஸ்வீப்பர் கருவிகள் மூலமாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய், வடிகால் பகுதிகளிலும் கண்காணிப்பு கருவிகள், மோப்ப நாய் உதவியுடன் வெடி குண்டு கண்டறியும் பிரிவினர் ேசாதனை நடத்தி வருகின்றனர்.பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை, ெகாடிசியா வளாகம் செல்லும் பகுதி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள வணிக, வர்த்தக நிறுவனங்கள் போலீஸ் பாதுகாப்பு எல்லைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நகரில் ஓட்டல், லாட்ஜ்களில் தங்கி உள்ள நபர்கள், வாரண்ட் குற்றவாளிகள், குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் விவரங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: