அரசு அருங்காட்சியகத்தில் மஞ்சள், பவானி ஜமுக்காள கண்காட்சி

ஈரோடு, பிப்.25: ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் அரசு அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் ஈரோடு மாவட்ட புவிசார் அடையாளங்களான மஞ்சள், பவானி ஜமுக்காளம் கண்காட்சி நேற்று முதல் துவங்கப்பட்டது.

இதில், உலகில் முக்கிய மஞ்சள் வகையான ஈரோடு மஞ்சள் வகைகளான விரலி, கிழங்கு, விதை மஞ்சள், மஞ்சள் பதப்படுத்தும் விதம், பவானி ஜமுக்காளம், அதன் நெசவு செய்யும் விதம் குறித்து காட்சி பொருளாகவும் இடம் பெற்றன.

மேலும், புகைப்படம் மூலமும் விளக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியினை ஈரோடு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்வமாக பார்த்து ரசித்தனர். இந்த கண்காட்சி வரும் மார்ச் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மேலும், அரசு அருங்காட்சியகம் சார்பில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு ‘நாட்டுப்புற கலைகளும், நாளைய இளைஞர்கள்’ என்ற தலைப்பில் நடந்த பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா அருங்காட்சியக காப்பாளர் ஜென்சி தலைமையில் நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக அரசு இசைப்பள்ளி தலைமையாசிரியர் சத்தியமூர்த்தி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களையும், கோப்பைகளையும் வழங்கி பாராட்டினார்.

Related Stories: