குளச்சலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி

குளச்சல், பிப். 25 : குளச்சலில் படகு கவிழ்ந்து மீனவர் பலியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குளச்சல்  துறைமுகத்தெருவை சேர்ந்தவர் ஆன்டனி (54). பைபர் படகு வைத்து மீன்பிடி  தொழில் செய்து வருகிறார். இவரது படகில் குளச்சல் அல்போன்சாள் காலனியை  சேர்ந்த வரீது (80), துறைமுக தெருவை சேர்ந்த சூசைநாயகம் (70), பனியடிமை (60)  உள்பட 10 பேர் மீன்பிடி தொழில் செய்கின்றனர்.  வழக்கம்போல் நேற்று  காலை சுமார் 6.30 மணியளவில் குளச்சல் சாயகாரர்குடி கடல் பகுதியில் இருந்து  மீன்பிடிக்க சென்றனர். கடலில் வலையை வீசிவிட்டு கரைக்கு திரும்பி  வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் படகு  கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 10 மீனவர்களும் படகுக்கு  அடியில் சிக்கி தண்ணீரில் மூழ்கினர். தொடர்ந்து எழுந்த அலையில் படகு  நிமிர்ந்தது. இதனால்  தண்ணீரின் மேல்பரப்புக்கு வந்த மீனவர்கள் படகில் ஏறினர்.  இந்த  சம்பவத்தில் 10 மீனவர்களும் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த வரீது  மயக்க நிலையில் இருந்தார்.  உடனடியாக அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து குளச்சல் அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் வரீது ஏற்கனவே  இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து குளச்சல் மரைன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: