செங்கம் அருகே குப்பநத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக 20 நாட்கள் தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

செங்கம், பிப்.25: செங்கம் அருகே குப்பநத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக 20 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.குப்பநத்தம் அணையில் முழு நீர் மட்டம் 59.04 கன அடியாகும். அதில் தற்போது 52.15 கன அடி தண்ணீர் கொள்ளவு உள்ளது. எனவே குப்பநத்தம் அணையிலிருந்து பாசன வசதிக்காக 20 நாட்கள் தண்ணீர் திறந்து விட அதிகாரிகள் முடிவெடுத்தனர். அதன்படி நேற்று குப்பநத்தம் அணையிலிருந்து பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் மகேந்திரன் தண்ணீரை திறந்து வைத்தார். இதையறிந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.மேலும், வரும் மார்ச் 5ம் தேதி வரை வினாடிக்கு 265.00 கன அடி வீதமும், அதன்பிறகு 16ம் தேதி வரை வினாடிக்கு 230.00 கன அடி வீதம் 20 நாட்களுக்கு 424.98 மில்லியன் கன அடி தண்ணீர் செங்கம், கரியமங்கலம், காயம்பட்டு, தோக்கவாடி, செ.நாச்சிபட்டு, முன்னூர், மங்கலம், கொட்டகுளம், முத்தனூர், தொரபாடி, நரசிங்கநல்லூர், படி அக்ரகாரம், பனைஒலைபாடி, ஒரவந்தவாடி, சி.சொர்பனந்தல்,

இறையூர், மேல்முடியனூர், மேல்பென்னாத்தூர், மேல்கரிப்பூர், கொழுந்தம்பட்டு, கீழ் வணக்கம்பாடி, ராதாபுரம், ஆலத்தூர், நயம்பாடி, நம்மியந்தல், மஷார், பொகாளம்பாடி, மேப்பத்துறை, சி.ஆண்டாப்பட்டு, வட புழுதியூர், அகரம்சிப்பந்தி மற்றும் தென்பள்ளிபட்டு ஆகிய கிராமங்களை சேர்ந்த 41 ஏரிகளின் முலம் 7183.72 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று பயன் பெறும். மேலும், பாசன நீரை சிக்கனமாக சிறந்த முறையில் பயன்படுத்தி நல்ல விளைச்சல் பெற்றிட எல்லா வகையிலும் ஒத்துழைக்குமாறு பாசன ஆயக்கட்டுதாரர்கள் கேட்டு கொண்டனர். அறிவிக்கப்பட்ட தேதிக்கு பின்னர், எக்காரணத்தை கொண்டும் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கும் தேதியை நீட்டிக்கப்படமாட்டது என பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் மகேந்திரன் தெரிவித்தார். அப்போது தாசில்தார் மனோகரன். உதவி பொறியாளர் ராஜாராம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: