திருவண்ணாமலை, பிப்.25: மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி, மண்டபத்தில் இருந்து வெளியேற மறுத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், மாநிலம் தழுவிய அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து, திருவண்ணாமலையில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை விடுவித்தனர். ஆனாலும், சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் மண்டபத்தில் இருந்து வெளியேற மறுத்து, அங்கேயே தங்கினர். மேலும், தொடர்ந்து 2வது நாளாக அந்த மண்டபத்திலேயே காத்திருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், சங்க நிர்வாகி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.