×

கால்நடை மருத்துவக்குழு தீவிர ஆய்வு வேலூர் பாலாற்றில் செத்து மடிந்த 7 ஆயிரம் வாத்துகளுக்கு வைரஸ் தொற்று

வேலூர், பிப். 25: வேலூர் பாலாற்றில் செத்து மடிந்த 7 ஆயிரம் வாத்து குஞ்சுகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கால்நடை மருத்துவகுழுவினர் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கரிகிரி சஞ்சீவிராயபுரத்தை சேர்ந்தவர் சுதாகரன். இவர் சமீபத்தில் வங்கியில் ₹7 லட்சம் கடன் வாங்கி வாத்து வளர்ப்புத்தொழிலில் ஈடுபட்டார். மொத்தம் 7 ஆயிரம் வாத்து குஞ்சுகளை வளர்த்து வந்த இவர் கடந்த 15ம் தேதி வேலூர் அடுத்த பெருமுகை பாலாற்றில் தேங்கியுள்ள மழைநீரில் விட்டுள்ளார். சிறிது நேரத்தில் வாத்து குஞ்சுகள் ஒவ்வொன்றாக சுருண்டு விழுந்து இறந்தன. சுமார் அரை மணி நேரத்தில் 7 ஆயிரம் வாத்து குஞ்சுகளும் இறந்துவிட்டது.
இதுதொடர்பாக கால்நடைதுறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் பாலாற்றில் தேங்கியிருந்த தண்ணீர் மற்றும் இறந்த வாத்து குஞ்சுகள் உள்ளிட்ட பல்வேறு மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நிவர் புயல் காரணமாக பெய்த மழையால் பாலாற்றில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த தண்ணீரில் ஏதாவது பறவை இறந்திருக்கலாம். அந்த தண்ணீரை குடித்த வாத்து குஞ்சுகள் இறந்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக ஆய்வுக்கு இறந்த வாத்து குஞ்சுகள், பாலாற்று தண்ணீர் உள்ளிட்ட மாதிரிகள் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தடவியல் ஆய்வகத்திற்கும், சென்னை மத்திய கால்நடை பல்கலைக்கழக ஆய்வு கூடத்திற்கும், சென்னையில் உள்ள மத்திய கால்நடை நோய் புலனாய்வு ஆய்வு கூட்டதிற்கும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில், இறந்த வாத்துகளுக்கு வழங்கப்பட்ட உணவு, பாலாற்றில் உள்ள தண்ணீர், வாத்தின் உடற்கூறு ஆய்வு முடிவுகளில் கெமிக்கல் பொருட்கள் எதுவும் கலக்கவில்லை என்று தெரியவந்தது. இதனால் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வைரஸ் தொற்று அல்லது பறவை காய்ச்சலால் வாத்துகள் இறந்துவிட்டதா? என்று ஆய்வு நடத்தப்படுகிறது. ஓரிரு நாட்களில் வாத்துக்கள் இறப்பிற்கான காரணம் தெரியவரும்.

Tags : Palatai ,
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்