ஆலங்குளம், பிப்.25: ஊத்துமலை அருகே தச்சுத் தொழிலாளி வீட்டை திறந்து 5.5 பவுன் நகை, ரூ.24 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டம், ஊத்துமலை அருகே மருக்காலங்குளம் தெற்குத் தெருவைச் சேர்ந்த மருதையா மகன் அருள் மாணிக்கம் (37). தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி முனீஸ்வரி, நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் நூறு நாள் வேலைக்குச் சென்றார். இதையடுத்து மாணிக்கமும், வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். வேலை முடிந்து பிற்பகல் 2.30 மணிக்கு வீடு திரும்பியபோது போது வீட்டின் கதவு திறந்துகிடந்தது கண்டு பதறினார். உள்ளே சென்றபோது பீரோ திறந்து கிடந்ததோடு அதில் வைத்திருந்த ரூ.24 ஆயிரம், 5.5 பவுன் நகைகள் மர்மநபர்களால் திருடுபோனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அளித்த தகவலின் பேரில் ஊத்துமலைை போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.