டிரம்பை குறிவைத்து துப்பாக்கி சூடு இதே போன்ற உணர்வு இந்தியாவிலும் நிலவுகிறது: மகாராஷ்டிரா காங். எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

புதுடெல்லி: மகாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ விஜய் வடெட்டியார் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க அதிபர் டிரம்பை குறிவைத்து விருந்து நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை அமெரிக்க மக்களின் கோபத்துடன் தொடர்புபடுத்தினார்.

அவர் பேசுகையில், ‘‘நீங்கள் எதை விதைக்கிறீர்களோ, அதையே அறுப்பீர்கள். ஒருவர் என்ன செய்தாலும், அதன் விளைவுகளை சந்தித்தே தீர வேண்டும். அதிபர் டிரம்ப் தனது பதவிக்காலத்தில் மற்ற நாடுகளை ஆதிக்கம் செலுத்த முயன்றார். உலகையே அடிமைப்படுத்த நினைத்தார். உலக அமைதியை சீர்குலைத்தார். தனது சொந்த திட்டங்களை நிறைவேற்ற அமெரிக்காவை சீரழித்து விட்டார். அமெரிக்காவில் என்ன நடந்ததோ அதுதான் இந்தியாவிலும் நடக்கிறது. இங்கு மக்கள் அமைதியாக இருப்பதால் எல்லாம் சரியாக செல்கிறது என அர்த்தமில்லை. இந்தியா முழுவதுமே அழிவின் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. எனவே அமெரிக்க மக்களிடம் உள்ள அதே உணர்வு இந்தியாவிலும் நிலவுகிறது’’ என்றார்.

இது கடும் சர்ச்சையாகி உள்ளது. இதற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜ செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவாலா நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘அமெரிக்காவில் நடந்தது போன்ற சம்பவம் இந்தியாவிலும் நடக்க வேண்டுமென அவர் விரும்புகிறார். அவர் எல்லை மீறி மிகவும் அருவருக்கத்தக்க கருத்தை தெரிவித்துள்ளார் ’’ என்றார்.

Related Stories: