ஆட்சியை கவிழ்க்க துணை போனவர்கள் இனி அரசியலில் தலையெடுக்கக் கூடாது திருமாவளவன் எம்பி ஆவேசம்

புதுச்சேரி, பிப். 25: புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கலைத்த மத்திய பாஜக அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி கலந்து கொண்டு பேசுகையில், புதுவையில்  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைப்பதற்கு பாஜகவுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? எஸ்சி, எஸ்டி மக்களுக்கு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவச கல்வி என்று அறிவித்தது. ஆதி திராவிட மக்களுக்கு வீடு கட்டும் நிதியை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியது. இது மக்களுக்கு இழைத்த துரோகமா? எந்த அடிப்படையில் இந்த அரசை மோடி கும்பல் கலைத்தது என்று சிந்தித்து பார்க்க வேண்டும். அரசை கலைப்பதற்கு அதிமுக துணை போயுள்ளது. விலை போனவர்கள் மீண்டும் வேட்பாளர்களாக வருவார்கள், அவர்களை மக்கள் துரத்தி அடிக்க வேண்டும். ஓட்டு போட்ட மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு சென்ற  6 பேரும், எந்த காலத்திலும் அரசியலில் தலையெடுக்கக் கூடாது. அரசை கலைத்ததன் மூலம் தமிழ்நாட்டுக்கும் ஒரு சிக்னல் கொடுக்கிறார்கள். தமிழகத்தில் பாஜகவின் ஜம்பம் பலிக்காது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதேபோல், புதுவையில் காங் - திமுக கூட்டணியே மாபெரும் வெற்றி பெற்று, அவர்கள் முகத்தில் கரியை பூசுவார்கள், என்றார்.

Related Stories: