மதுரை, பிப். 25: மதுரை எம்.சத்திரப்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (55). பெட்டிக்கடை வைத்துள்ளார். சேலத்தை சேர்ந்த முனியப்பன், இவரது மனைவி இதே கிராமத்தில் சில மாதங்களாக தங்கி, கிடைத்த கூலி வேலைகளை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 15ம் தேதி, முனியப்பன், இரு தங்க காசுகளை அழகர்சாமியிடம் விற்றுள்ளார். அதற்கு அழகர்சாமி ரூ.2 ஆயிரம் கொடுத்துள்ளார். தொடர்ந்து முனியப்பன் தன்னிடம் இதேபோல் 300 தங்கக்காசுகள் இருப்பதாகவும் அதை குறைந்த விலைக்கு தருவதாகவும் அழகர்சாமியிடம் கூறியுள்ளார். இதை நம்பிய அழகர்சாமி, ரூ.3.80 லட்சத்தை முனியப்பனிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட முனியப்பன், தான் பேசியபடி 300 தங்க காசுகளை கொடுத்து விட்டு ஊரை விட்டே சென்றுவிட்டார். திடீரென முனியப்பனும் அவரது மனைவியும் சென்றதால், சந்தேகம் அடைந்த அழகர்சாமி, தங்க காசுகளை பரிசோதித்து பார்த்துள்ளார். அப்போதுதான், அனைத்தும் கவரிங் காசுகள் என்பது தெரிந்தது. இதுகுறித்து அழகர்சாமி அளித்த புகாரில் சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான சேலம் தம்பதியை தேடி வருகிறார்.