நாகர்கோவில் பூங்காவில் ரூ.3.49 கோடியில் அமைக்கப்பட்ட கோளரங்கம் மூடி கிடப்பதால் மாணவர்கள் ஏமாற்றம்

*கோடை விடுமுறையில் திறக்க கோரிக்கை

நாகர்கோவில்: நாகர்கோவில் பூங்காவில் கோளரங்கம் திறக்கப்பட வேண்டும் என மாணவ, மாணவிகள், குழந்தைகள் எதிர்பார்க்கிறார்கள். நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான சர்.சி.பி. ராமசாமி ஐயர் நினைவு பூங்கா திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் தொடர்புடைய பாரம்பரியம் மிக்க பூங்காவாகும். இந்த பூங்காவில், நூலகம், மிக் ரக போர் விமானம், கலைவாணரால் நிறுவப்பட்ட காந்தி நினைவு ஸ்தூபி, செல்பி பாயின்ட் உள்ளிட்டவை உள்ளன.

நாகர்கோவில் மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையம் அருகில் இருப்பதுடன், நகரின் மைய பகுதியில் உள்ளதால் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள், குழந்தைகள் வந்து செல்கிறார்கள். குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களும், தின்பண்டங்கள் விற்பனை கடையும் செயல்படுகிறது. இந்நிலையில், இங்கு நவீன கருவிகளுடன் கூடிய அறிவியல் அரங்குகள் கொண்ட அறிவியல் பூங்கா அமைக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது.

இதன்படி, கோளரங்கம், நியூட்டனின் 3ம் விதி உள்ளிட்டவற்றை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அறிவியல் அரங்கம், ரூ.3.49 கோடியில் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஏப்ரலில் ெதாடங்கின. நவீன டிஜிட்டல் கோளரங்கம் 8 மீட்டர் விட்டம் கொண்ட கோள வடிவ திரையுடன் அமைந்துள்ளது.

4 கே தரத்தில் அறிவியல் மற்றும் வானவியல் தொடர்பான ஒலி, ஒளி காட்சி ஒளிபரப்பு செய்யும் வசதிகள் உள்ளன. இதை பார்ப்பதற்காக 40 இருக்கைகளுடன் ஏ.சி. வசதியுடன் கூடிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அறிவியல் தொழில் நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய நுட்பங்களை செய்முறை மூலம் கற்றுக் கொள்ளும் வகையில் அறிவியல் சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பணிகள் எல்லாம் முடிவடைந்துள்ளன. ஆனாலும் கோளரங்கம் திறக்கப்பட வில்லை.

கோளரங்கத்தை சுற்றி பல்வேறு அறிவியல் உபகரணங்கள் உள்ளன. இதற்கான விளக்கம் தமிழ், ஆங்கிலத்தில் உள்ளன. இவற்றில் சில கருவிகள் செயல்படாமல் உள்ளன. மேலும் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு பலகை சரியாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மழையில் நனைந்து சேதமடையும் வகையில் உள்ளது. அறிவியல் மையம் என மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் வருகிறார்கள். ஆனால் இதன் செயல்பாடுகளை விளக்கி கூறவோ, உபகரணங்களை செயல்படுத்தி காட்டவோ பணியாளர்கள் யாரும் இல்லை. இதனால் குழந்தைகள் ஏமாற்றம் அடைகிறார்கள்.

தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதுடன், கோடை விடுமுறை காலமும் என்பதால் குடும்பம், குடும்பமாக வருபவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதில் குழந்தைகள் ஆர்வமுடன் வந்து அறிவியல் உபகரணங்களை இயக்கி பார்த்து ஏமாற்றம் அடைகிறார்கள்.

எனவே உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் இந்த கோளரங்கத்தை செயல்பாட்டுக் கொண்டு வர வேண்டும். கோடை விடுமுறையில் இதை செயல்படுத்தினால், அதிகளவில் மாணவ, மாணவிகள் வருவார்கள்.

எனவே மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, தாமதம் இல்லாமல் இதை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூங்காவுக்கு வருபவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்துடன் இல்லாமல் ரூ.3.49 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கோளரங்கம் மற்றும் அது சார்ந்த உபகரணங்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, ஏற்கனவே கோளரங்கத்தில் பணிகள் முடிவடைந்து சோதனை முடிந்துள்ளது. இதை இந்த வார இறுதிக்குள் திறக்க ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா நடவடிக்கை மேற்ெகாண்டு வருகிறார் என்றனர்.

Related Stories: