கிராம பெண்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

செய்யூர்: செய்யூர் தாலுகா சூனாம்பேடு ஊராட்சி இல்லீடு கிராமம் காலனி பகுதியில் சுமார் 700 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு நேற்று அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கப்பட்டன.  ஒரு பொருளை கொடுத்து விட்டு, மற்றொரு பொருள் இல்லை என கடை ஊழியர் கூறினார். இதனால், ஆத்திரமடைந்த மக்கள், ஏன் எப்போதும் பொருட்கள் இல்லை என கூறுகிறீர்கள் என கேட்டனர். குறிப்பாக மண்ணெண்ணெய், பருப்பு, பாமாயில் ஆகியவற்றை ஒவ்வொரு மாதமும் முறையாக வழங்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், கடை ஊழியர் அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த பெண்கள் 30க்கும் மேற்பட்டோர் அக்கிராம நுழைவு சாலையில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சூனாம்பேடு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: