திட்டக்குடி அருகே பரிதாபம் பைக் மீது லாரி மோதியதில் பிளஸ்1 மாணவர்கள் 2 பேர் பலி

திட்டக்குடி, பிப். 24: திட்டக்குடி அருகே பைக் மீது லாரி மோதியதில் பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள செங்கமேடு கிராமத்தை சேர்ந்தவர் இங்கர்சால் மகன் ஜெயசூர்யா (17). அதே கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் மகன் பிரவின்குமார் (17). இவர்கள் இருவரும் இறையூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு பிரவின்குமாரும், ஜெயசூர்யாவும் ஒரு பைக்கில் பெண்ணாடத்தில் இருந்து ஆவினங்குடியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கூடலூர் அருகே சென்று கொண்டிருக்கும் போது எதிரே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் ஜெயசூர்யாவுக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். அருகில் இருந்தவர்கள் பிரவின்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஜெயசூர்யாவுக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பள்ளி மாணவர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: