திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில், மாசி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். திருப்போரூர் கந்தசுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 10 மணியளவில் அலங்கரிக்கப் பட்ட தேரில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நான்கு மாடவீதிகளிலும் பக்தர்களுக்கு மோர், ரஸ்னா, தயிர் சாதம், புளி சாதம், சாம்பார் சாதம் போன்ற அன்னதானம் வழங்கப்பட்டது.