திருச்சி, பிப்.24: திருச்சி ஏர்போர்ட் காவேரி நகரில் உள்ள காலிமனையில் நேற்று அதிகாலை 6.15 மணிக்கு குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்த போது சிமெண்ட் சாக்குபையில் சுற்றப்பட்ட நிலையில் 7 மாத பெண் குழந்தை கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஏர்போர்ட் நுண்ணறிவு பிரிவு ஏட்டு ஜெயக்குமார் நேரில் சென்றார். தகவலறிந்த பேட்ரோல் வாகன சிறப்பு எஸ்ஐ சுப்ரமணி, ஓட்டுநர் அலெக்ஸ் ஆகியோர் குழந்தையை மீட்டனர். குறைபிரசவத்தில் பிறந்த அந்த குழந்தையை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்தனர். மேலும் சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து குழந்தையை மீட்ட சைல்டுலைன் அமைப்பினர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஏர்போர்ட் போலீசார், குழந்தையை வீசி சென்ற கல்மனம் படைத்த தாயை தேடி வருகின்றனர். மேலும் தகவலறிந்து குழந்தையை மீட்ட நுண்ணறிவு பிரிவு ஏட்டு ஜெயக்குமார் உள்ளிட்ட போலீசாரை உயரதிகாரிகள் பாராட்டினார்.