திருவாரூர், பிப்.24: திருவாரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக நேற்று அங்கன்வாடி ஊழியர்கள் வாயில் கருப்பு துணி கட்டி, ஒப்பாரி வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் முறையான குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது பணி கொடையாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தொழிற்சங்கம் சார்புடைய அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் நேற்று முன்தினம் திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் பிரேமா தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 246 பேர்களை தாலுகா போலீசார் கைது செய்து திருவாரூர் அருகே கூடூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்து பின்னர் விடுதலை செய்தனர்.