10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூர், பிப். 24: கரூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க கரூர் மாவட்ட கிளையின் சார்பில் நேற்று 7வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில நிர்வாகி அன்பழகன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுப்ரமணியன், செயலாளர் சக்திவேல், பொருளாளர் ஜெயராம் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினர். பேரிடர் மேலாண்மை மற்றும் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பணியிடம் ஏற்படுத்த வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் புதியதாக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அடிப்படை பயிற்சி மற்றும் நிலஅளவை பயிற்சி வழங்கப்பட வேண்டும். பதவி உயர்வுக்கு இந்த பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கருணை அடிப்படையில் நியமனதாரர்களின் பணியினை ஒரே அரசாணையில் வரன்முறை செய்து உத்தரவிட கலெக்டருக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்பன போன்ற 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பிப். 17ம்தேதியில் இருந்து இந்த சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்து, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 7வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: