×

சட்டப் பேரவை தேர்தலை நிறுத்த ஒன்றிய அரசு சதி; ராணுவத்தை ஏவி விட்டு வாக்குகளை திருடும் பாஜக: மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு

 

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாஜக குறுக்கு வழிகளைப் பின்பற்றி ராணுவத்தை ஏவுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார். மேற்கு வங்கத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற வேண்டிய சூழலில், சுமார் 2 லட்சம் ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்கள் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். எல்லையைப் பாதுகாக்க வேண்டிய வீரர்களைத் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தி, வாக்காளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது. இதற்கு முன்னதாக பண மதிப்பிழப்பு போன்ற தேவையற்ற நடவடிக்கைகளால் மக்களை நீண்ட வரிசையில் நிற்க வைத்துத் துயரப்படுத்திய பாஜக, தற்போது கவச வாகனங்களை வீதிகளில் இறக்கி ஜனநாயகத்தைப் படுகொலை செய்யத் துடிக்கிறது என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. மேலும் மாநிலத்தின் அமைதியைக் குலைக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களைத் திட்டமிட்டு கைது செய்யும் பணியும் நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘பாஜக மிகவும் ஊழல் நிறைந்த மற்றும் அருவருப்பான அரசியல் கட்சி. வாக்குகளைக் கொள்ளையடிக்க அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். துணை ராணுவ வீரர்களைக் கொண்டு தங்களுக்கு ஆதரவாக வாக்காளர்களை வலுக்கட்டாயமாக ஓட்டு போட வைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. போலீசார் சிலர் பாஜகவுடன் கைகோர்த்துக்கொண்டு வாக்காளர்களைத் துன்புறுத்துகின்றனர். எனது தொகுதியில் கூட பிரசாரம் செய்யத் தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. எவ்விதத்திலாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ஒன்றிய பாஜக அரசு செயல்படுகிறது’ என்று குற்றம் சாட்டினார்.

மேலும் அவர் பேசுகையில், ‘சுமார் 1,000 திரிணாமுல் தொண்டர்களைக் கைது செய்யத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தேர்தல் நாளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேண்டுமென்றே செயலிழக்கச் செய்யப்படலாம். இயந்திரம் சரி செய்யப்படும் வரை மக்கள் வரிசையை விட்டு நகர வேண்டாம். பாஜகவின் சதி திட்டங்களை முறியடிக்க, தேர்தல் ஏஜென்ட்கள் கடைசி வாக்குப்பதிவு முடியும் வரை வெளியேறக் கூடாது. மேற்குவங்கத்தின் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க நினைக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும். வட 24 பர்கானாஸ் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறுவது அவசியம். ஒவ்வொரு தொகுதியும் மிக முக்கியமானது’ என்று தெரிவித்தார்.

 

Tags : EU government ,council ,BJP ,Mamta Banerjee Bakir ,Kolkata ,Chief Minister ,Mamata Banerjee ,West Bengal Assembly elections ,West Bengal ,
× RELATED 152 எம்எல்ஏ பதவிக்கு 1,478 வேட்பாளர்கள்...