பேராவூரணி, ஏப்.23: பேராவூரணி நேதாஜி மருதையார் சமூக கல்வி அறக்கட்டளை சார்பில் பொறியியல் கல்லூரி மாணவிகள் இரண்டு பேருக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டது. பேராவூரணி அருகே உள்ள மருங்கப்பள்ளத்தை சேர்ந்த மாணவி கார்த்திகா தேவி, பின்னவாசல் பகுதியை சேர்ந்த சுப்ரியா ஆகிய இருவரும் கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்து உயர்கல்வி பயில சிரமப்பட்ட நிலையில், நேதாஜி மருதையார் சமூக கல்வி அறக்கட்டளை சார்பில் திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்க்கப்பட்டு, முதலாமாண்டை நிறைவு செய்து ,அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இருவரையும் கல்வி அறக்கட்டளை நிறுவனர் நேதாஜி தெட்சணாமூர்த்தி பாராட்டி இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு தேவையான கல்வி உபகரணங்கள் மற்றும் உதவிதொகை வழங்கினார்.
