×

கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து மறியல்

தர்மபுரி, பிப்.24: தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு உடை அணிந்து மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 143பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின், தர்மபுரி மாவட்ட கிளையின் சார்பில் சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன் தர்மபுரி- சேலம் மெயின் ரோட்டில் சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து சாலைமறியலில் நேற்று ஈடுபட்டனர். மாவட்ட துணை தலைவர் வளர்மதி தலைமை வகித்தார். துணை தலைவர் மகேஸ்வரி, அனுசுயா, மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன், காவேரி உள்ளிட்ட 137 பெண்கள் உள்பட 143பேர் கைது செய்யப்பட்டு, போலீஸ் வேனில் ஏற்றிச்செல்லப்பட்டனர். பின்னர் ஐஎம்ஏ ஹாலில் தங்க வைக்கப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ₹9ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கும் பணி கொடையை, ₹1லட்சத்திலிருந்து ₹5லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா