தர்மபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிப்பு

தர்மபுரி, பிப்.24: தர்மபுரி மாவட்டத்தில் வெயிலின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஜனவரி மாதம் வரை மழை பெய்தது. கார்த்திகை மாதத்தை தாண்டி மார்கழி மாதத்திலும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், அறுவடை பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் நெல் பயிர் தண்ணீரில் மூழ்கியது. எப்போதும் இல்லாத அளவிற்கு தை பிறப்பின்போது பலத்த மழை பெய்ததால், பொங்கல் பண்டிகை பிசுபிசுத்தது. மத்திய மாவட்டமான சேலம் பகுதியிலும் நல்ல மழை பெய்தது. தர்மபுரி மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு பகுதியில் காவிரி ஆறு பாய்ந்தாலும், பெரும்பலான நிலப்பகுதி வானம் பார்த்த பூமியாகவே உள்ளது. இதனால், தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். சாகுபடி பணியையும் முடுக்கி விட்டனர்.

ஆனால், தற்போது கோடைக்கு முன்பாகவே வெயிலின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் இம்மாத துவக்கத்தில் அதிகபட்சமாக 30.5 டிகிரி செல்சியசாக பதிவான வெயில் அளவு, படிப்படியாக அதிகரித்து கடந்த 14ம் தேதி 33.3 டிகிரி செல்சியசானது. தொடர்ந்து வெயில் சுட்டெரித்த நிலையில், நேற்றும் 32.7 டிகிரி செல்சியசாக பதிவானது. இந்நிலையில், இன்றைய நிலவரப்படி தர்மபுரி மாவட்டத்தில் வெயிலின் அளவு 33.3 டிகிரி செல்சியசாக பதிவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடைக்கு முன்பே வெயில் சுட்டெரிக்கும் நிலையில், இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: