சாலையில் திரிந்த 35 மாடுகள் பறிமுதல்

வீரவநல்லூர், பிப்.24:   பாளை- அம்பை சாலையில் சேரன்மகாதேவி ரவுண்டானா கீழ்புறத்தில் இருந்து பத்தமடை வரை இரவு நேரத்தில் அதிக அளவில் மாடுகள் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக திரிவது வழக்கம். மேலும் ஒரு சில மாடுகள் சாலையில் படுத்துக்கொள்வதால் விபத்து ஏற்படுகிறது. இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் மாட்டின் உரிமையாளர்களுக்கு பல முறை தகவல் தெரிவித்தும்  மாடுகளை தொழுவத்தில் அடைப்பதில் மெத்தனம் காட்டினர். இதனால் இரவு நேரங்களில் இருசக்கரத்தில் வருவோர் விபத்துக்குள்ளாவது தொடர்கதையானது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் சைக்கிளில் அப்பகுதிக்கு சென்ற சப் கலெக்டர் பிரதிக்தயாள் வருவாய்த்துறை, பேரூராட்சித்துறை மற்றும் காவல்துறையினரின் உதவியோடு சாலையோரம் சுற்றித்திரிந்த மற்றும் படுத்துக்கிடந்த 35 மாடுகளை அதிரடியாக பறிமுதல் செய்து ரவுண்டானாவில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் அடைத்தார்.

சப் கலெக்டரே நேரடியாக களத்தில் இறங்கி மாடுகளை அடைக்க ஏற்பாடுகள் செய்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிடிபட்ட மாடுகள் அனைத்தும் கோசாலையில் இன்று அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: