குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட 221 மாற்றுத்திறனாளிகள் கைது திருவண்ணாமலை, ஆரணியில்

திருவண்ணாமலை, பிப்.24: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட 105 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், மாநிலம் தழுவிய அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நேற்று நடந்தது. அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்துக்கு, மாவட்ட நிர்வாகி ரமேஷ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சத்யா, ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, பிற மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதைப் போல, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ₹3 ஆயிரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். குறைந்தபட்சம் 30 சதவீதம் முதல் அதிகபட்சம் 70 சதவீதம் வரை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ₹3 ஆயிரமும், அதற்கு அதிகமான பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ₹5 ஆயிரமும் மாதந்தோறும் வழங்க வேண்டும்.தனியார் துறை வேலைவாய்ப்புகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீட்டை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான சிறப்பு தனி சட்டத்தை உடனடியாக கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை கலெக்டர் அலுவலகத்துக்கள் தங்கியிருப்பதாக தெரிவித்து, அலுவலகத்துக்குள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் தடுப்பு வேலி அமைத்து தடுத்து நிறுத்தினர். அதனால், அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 47 பெண்கள் உள்பட 105 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர். அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

ஆரணி: ஆரணியில் பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடந்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 116 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்து ஆரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Related Stories: