குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் தர்ணா போராட்டம்

திருப்பூர்,பிப்.24:திருப்பூர், மாநகரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 9வது நாளாக பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் ஒன்றிணைந்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த 14ம் தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்திய முஸ்லிம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்டோர்  காயமடைந்தனர். போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர், அறிவொளி ரோட்டில் கடந்த 15ம் தேதி காலை முதல் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய தர்ணா போராட்டம் ஒன்பதாவது நாளாக நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கிய போலீஸ் அதிகாரி ஏ.சி தினகரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், மத்திய அரசும் குடியுரிமை திருத்த சட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிட  மாட்டோம் என அறிவித்து சுமார் 500 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: