பெரம்பூர்: பெரம்பூர் ரயில் நிலையத்தில் 32 தங்க காசுகளை பறிமுதல் செய்தனர். சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் பெரம்பூர் ரயில்வே பாதுகாப்பு படையின் தேர்தல் சிறப்பு படை குழுவினர் மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து நேற்றிரவு 10.30 மணியளவில் சோதனை நடத்தினர். அப்போது நடைமேடை ஒன்றில் சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது ஒரு கிராம் மதிப்புள்ள 32 தங்க காசுகள் இருந்தது. அதற்குண்டான ஆவணங்கள் இல்லாததால் விசாரணை நடத்தினர்.
இதில், அந்த நபர் மாதவரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (45) என்பதும் பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருவதும் தெரிந்தது. தங்கள் நிறுவனத்தில் பணியாற்றிவரும் நபர்களுக்கு இந்த ஆண்டு அவர்களது பணியை பாராட்டி பரிசு கொடுப்பதற்காக தங்க காசுகளை எடுத்து சென்றது தெரிய வந்தது. இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் ஒரு கிராம் மதிப்புள்ள 32 தங்க காசுகளை பறிமுதல் செய்து திருவிக.நகர் தேர்தல் பறக்கும் படை அதிகாரி விஜயகுமாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் தங்க நாணயங்களை பெரம்பூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
* எழும்பூரில் ரூ.1 லட்சம் பறிமுதல்
எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பேசின்பிரிட்ஜ் ஹஜ் பில்டிங் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி கார்த்திக் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை நடத்தி பைக்கில் வந்த ஒருவரிடம் இருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அவர் புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த பியூஸ் குமார் (21) என்பதும் சவுகார்பேட்டையில் நகைக்கடை நடத்தி வருவதும் தெரிந்தது. வாடிக்கையாளர்களின் நகையை விற்பனை செய்துவிட்டு அந்த பணத்தை வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் அந்த பணத்தை பெரம்பூரில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
