கோவை, பிப்.24: கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாதன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் இவருடன் அரசூர் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன், ரவிச்சந்திரன் ஆகியோரும் பங்குதாரர்களாக இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்தனர். கோபிநாதனுக்கும், விஸ்வநாதனுக்கும் இடையே பண விவகாரத்தில் பிரிவு ஏற்பட்டது. கடந்த 2014ம் ஆண்டில் விஸ்வநாதன், கோபிநாதனை பீளமேடு விமான நிலையம் அருகே காரில் கடத்தி சென்று தாக்கியதாகவும், மிரட்டி ஆவணங்களில் கையெழுத்து வாங்கியதாகவும் போலீசில் புகார் தரப்பட்டது. இது தொடர்பாக 9 பேர் மீது வழக்கு பதிவானது. இந்த வழக்கு சி.பி.சிஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த லட்சுமணன், பரமசிவம் ஆகியோரை போலீசார் நேற்று முன் தினம் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 3 கார் பறிமுதல் செய்யப்பட்டது.