சூலூர் அருகே வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகை பறித்த தம்பதி

சூலூர், பிப்.24:சூலூர் அருகே வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி 4 பவுன் நகை பறித்த தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சூலூர் அருகே உள்ள கள்ளப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மனைவி பத்மாவதி (80). கணவரை இழந்த நிலையில் மனவளர்ச்சி குன்றிய தனது மகன் புருஷோத்தமன் (50) என்பவருடன் வசித்து வருகிறார்.பத்மாவதி நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தனது மகனுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் கிழக்கு வீதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சுப்ரமணி (42), அவரது மனைவி பப்பி (எ) தமிழ்ச்செல்வி ஆகியோர் திடீரென வீடு புகுந்தனர்.

 பத்மாவதி என்ன என கேட்பதற்குள் அவரை தலையில் தாக்கி அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை இருவரும் பறித்தனர். திடீர் தாக்குதலில் நிலைகுலைந்த மூதாட்டி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்த சுப்ரமணியும், தமிழ்ச்செல்வியும் தப்பி ஓடினர். இருவரையும் அக்கம் பக்கத்தினர் துரத்தி சென்றனர். இதில், சுப்ரமணி மட்டும் சிக்கினார். அவரை சூலூர் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரித்தனர். மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், தம்பதி இருவரும் வீடு புகுந்து பத்மாவதியை தாக்கி நகை பறித்துக் கொண்டு தப்பியோடும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இந்நிலையில், நேற்று காலை அப்பகுதியில் பதுங்கி இருந்த தமிழ்செல்வி போலீசில் சிக்கினார். இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: