பவானி, பிப். 24: பவானி அருகேயுள்ள குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை பொது மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கல்விச்சீர் வழங்கினர். பவானி அருகேயுள்ள குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் பள்ளியின் வளர்ச்சிக்கும், தற்போது பயிலும் மாணவர்களுக்குத் தேவையான உபகரணங்கள், பொருட்களை வழங்க முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மேஜை, நாற்காலி, நோட்டு, எழுதுகோல், சில்வர் அண்டா, தட்டு, குடம் என ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்களை பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சீர்வரிசையாக எடுத்து வந்து பள்ளிக்கு வழங்கினர். இந்த சீர்வரிசை கொண்டு வந்தவர்களை தலைமையாசிரியை வசந்தி மற்றும் ஆசிரியர்கள் வரவேற்று, பள்ளி வளர்ச்சிக்கு உதவியதற்கு நன்றி தெரிவித்தனர்.