புதுச்சேரியில் 6வது முறையாக ஆட்சி கவிழ்ப்பு 3 முறை முதல்வர் மாற்றம்

புதுச்சேரி, பிப். 23: புதுச்சேரியில் அரசியல் வரலாற்றில் இதுவரை 6 முறை ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளது. 3 முறை முதல்வர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 1963 முதல் 1966 வரையிலான ஆட்சியில் முதல்வர் பதவியை பிடிக்க வெங்கடசுப்பா ரெட்டியார், பாரூக் மரைக்காயர் இடையே போட்டா-போட்டி நிலவியதால் அரசுக்கு நிலையற்ற தன்மை நீடித்தது. 1967ல் வெங்கடசுப்பா ரெட்டியார் ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பாரூக் மரைக்காயர் முதல்வராக பதவியேற்றார். அவரது ஆட்சியும் ஓராண்டில் கவிழ்க்கப்பட்டு அதன்பிறகு 1968 மார்ச் முதல் செப்டம்பர் வரை மீண்டும் வெங்கடசுப்பா ரெட்டியார் ஆட்சி நடந்தது. 1969ம் ஆண்டு முதல் 73 வரையிலான காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவுடன் திமுக ஆட்சியில் இருந்தது. அப்போது கம்யூனிஸ்ட் தனது ஆதரவை அரசுக்கு விலக்கியதால் பாரூக் மரைக்காயர் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. அதன்பிறகு 1974ல் அதிமுக ராமசாமி முதல்வராக பதவியேற்றார். அரசுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்வதில் பிரச்னை பூதாகரமாகி 21 நாளில் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பின்னர் 1977ல் எஸ்.காங்கிரஸ் ஆதரவுடன் அதிமுக ராமசாமி முதல்வராக இருந்தார். ஒரு ஆண்டில் அதிமுகவுக்கு அளித்த ஆதரவை எஸ்.காங்கிரஸ் வாபஸ் பெற்றதால் ஆட்சி கவிழ்ந்தது. அதன்பிறகு 1980 வரை கவர்னர் ஆட்சியில்  இருந்தது.

தொடர்ந்து 1980 முதல் 83 வரையிலான காலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் திமுக ஆட்சி இருந்தது. டி.ராமச்சந்திரன் முதல்வராக இருந்தார். அப்போது தென்மாநில முதல்வர் மாநாட்டில் பங்கேற்கும் விவகாரத்தில் இருகட்சிக்கும் கருத்துவேறுபாடு ஏற்படவே, தனது ஆதரவை காங்கிரஸ் விலக்கியதால் ஆட்சி தானாக கவிழ்ந்தது. 1990ல் ஜனதாதளம் ஆதரவுடன் திமுக ஆட்சி நடந்தது. முதல்வராக டி.ராமச்சந்திரன் இருந்த நிலையில் ஓராண்டில் ஜனதாதளம் தனது ஆதரவை விலக்கியது. இதனால் அவரது ஆட்சி கவிழ்ந்தது. 1991 முதல் வைத்திலிங்கம் முதல்வராக பதவியேற்றார்.  தற்போது முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு 2016ல் பதவியேற்று 4 வருடம் 9 மாத காலத்தை பூர்த்தி செய்திருந்த நிலையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியை இழந்துள்ளது. தற்ேபாதுவரை புதுவையில் 6 முறை ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளது.

இதுமட்டுமின்றி 3 முறை முதல்வர்கள் மாற்றம் நடந்துள்ளது. 1996ல் திமுக, தமாகா, கம்யூனிஸ்ட் கூட்டணியில் ஜானகிராமன் (திமுக) முதல்வராக இருந்தார். இந்த அமைச்சரவையில் திமுக விலகியதால் காங்கிரசில் சண்முகம் முதல்வராக இருந்தார். அவர் போட்டியிட யாரும் தொகுதியை விட்டுக் கொடுக்காத நிலையில் அதன்பிறகு அவர் ராஜினாமா செய்யவே முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார். பின்னர் 2006 வெற்றிபெற்று முதல்வராக ரங்கசாமி தொடர்ந்த நிலையில், நமச்சிவாயம், கந்தசாமி உள்ளிட்ட சிலர் அவருக்கு எதிராக காங்கிரசில் போர்க்கொடி தூக்கவே, முதல்வர் பதவியிலிருந்து ரங்கசாமி நீக்கப்பட்டார். மீண்டும் முதல்வராக வைத்திலிங்கம் பதவியேற்றார்.

Related Stories: